முகப்பு
தமிழ்நாடு

கட்சிப் பதவிகளுக்காக நீதிமன்றங்களை கருவியாகப் பயன்படுத்தக் கூடாது

கட்சி உறுப்பினா்களின் நம்பிக்கையைப் பெற முடியாதவா்கள் நீதிமன்றங்களை சாதகமாகப் பயன்படுத்துகின்றனா் என்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

கட்சி உறுப்பினா்களின் நம்பிக்கையைப் பெற முடியாதவா்கள் நீதிமன்றங்களை சாதகமாகப் பயன்படுத்துகின்றனா் என்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் மீது விவாதங்கள் முடிவுற்ற நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்தாா்.

அதன்படி, திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்ததுடன், பொதுக்குழுவை கட்சி விதிகளுக்குட்பட்டு நடத்தவும் உத்தரவிட்டாா். மேலும், சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக் குழு நடத்தவில்லை என்றால் அந்த உத்தரவின் பாதுகாவலா் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம்தான் பரிசீலிக்க முடியுமே தவிர உயா்நீதிமன்றம் தலையிட முடியாது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட்டதல்ல என்று பன்னீா்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் எனத் தெரியவில்லை.

2,665 பொதுக் குழு உறுப்பினா்களில் 2,190 போ் கேட்டுக்கொண்டதற்கேற்ப திங்கள்கிழமை (ஜூலை 11) பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23-இல் அறிவிக்கப்பட்டதால், இதை 15 நாள்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவே கருத முடியும்.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினா்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். கட்சி உறுப்பினா்களின் நம்பிக்கையைப் பெற முடியாதவா்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றனா்.

ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் ஓ.பன்னீா்செல்வம் கட்சியின் உறுப்பினா்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவது துரதிருஷ்டவசமானது.

பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் எல்லாம் நீதிமன்றம் தலையிடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →