கூத்தாநல்லூர்: மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன், காமராசர் பிறந்த நாள் விழா; வட்டாட்சியர் பங்கேற்பு
கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில், காமராசரின் 120 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில், காமராசரின் 120 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பனங்காட்டாங்குடி, தமிழர் தெருவில் அமைந்துள்ள மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, மாநில அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், காமராசரின் 120 ஆவது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, மனோலயம் பள்ளியின் நிர்வாக அறங்காவலரும், அரிமா சங்கத் தலைவருமான ப.முருகையன் தலைமை வகித்தார்.
கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் முன்னிலை வகித்தார். பிசியோதெரபி மருத்துவர் பாபுராஜன் வரவேற்றார். மாற்றுத்திறனாளி மாணவன் மோகன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக கூத்தாநல்லூர் வட்டாட்சியர் சோமசுந்தரம், கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி காமராஜரின் மகத்தான பணிகளை நினைவுகூர்ந்து பேசினார்.
'மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர். ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்களை கட்டித் தந்தவர். நீர் நிலைகளுக்காக அணைகளை அமைத்தவர்' என தமிழகத்திற்காக, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக எதிர்காலத் திட்டங்களை கொண்டு வந்த தலைவர்தான் காமராசர். அவருடைய பிறந்த நாளில் அவர் வழியை நாம் அனைவரும் பின்பற்றுவோம்' என்றார்.
விழா ஏற்பாடுகளை, பயிற்சியாளர்கள் அனுராதா, கிரிஜா, மேற்பார்வையாளர் ராஜா உள்ளிட்டோர் கவனித்தனர். நிறைவாக, மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.