தஞ்சாவூரில் 13 பெருமாள் கோயில்களின் நவநீத சேவை (வெண்ணெய்த்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில்களில் 13 நவநீத சேவை வழிபாடு 88வது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடு மற்றும் அதனைத் தொடர்ந்து நவநீத சேவை (வெண்ணெய்தாழி உற்சவம்) நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்தாண்டும் 24 பெருமாள்கள் கருட சேவை புறப்பாடு 19ந் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று 13 பெருமாள் நவநீத சேவை அதி விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் வெண்ணாற்றங் கரையிலிருந்து திவ்ய தேச பெருமாள்களுடன் பல்லக்குகளில் புறப்பட்டு ஸ்ரீநீலமேகப்பெருமாள், ஸ்ரீநரசிம்மபெருமாள், ஸ்ரீமணிகுன்னப்பெருமாள், ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீயாதவ கண்ணன், ஸ்ரீரெங்கநாத பெருமாள், ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீபிரசன்னவெங்கடேசபெருமாள், ஸ்ரீவரதராஜ பெருமாள் உள்ளிட்ட 13 பெருமாள் கோவில்களிலிருந்து வெண்ணெய் குடத்துடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெருமாள்கள் புறப்பட்டு தஞ்சை நகரின் முக்கிய ராஜவீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய தேரோடும் ராஜவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர்.
இந்த வெண்ணெய்த்தாழி உற்சவத்தில் பஜனை பாடல்களை பாடி பக்தர்கள் சென்றனர். இந்த நவநீத சேவையை ஏராளமான, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.