மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குளிக்கச் சென்றபோது குளத்து நீரில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குளிக்கச் சென்றபோது குளத்து நீரில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
மன்னார்குடி அடுத்த காரக்கோட்டை தண்ணீர் பந்தல் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் டேனியல்(15). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
காரக்கோட்டை நடேசன் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் மகேந்திரன்(15). இவர் வடுவூர் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த தங்களது நண்பர்கள் மேலும் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு நான்கு பேரும் சேர்ந்து செருமங்கலம் உடையார்தெருவில் உள்ள சக்குறியான் குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். குளித்துக்கொண்டிருக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.
இதில், டேனியல், மகேந்திரன் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்குவதைப் பார்த்த மற்ற இரண்டு பேரும் நீச்சல் அடித்து கரைக்கு வந்து உதவி கேட்டு சத்தம் போட்டதை பார்த்த அருகிலிருந்தவர்கள் அங்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர்.
பின்னர், தண்ணீர் மூழ்கியதில் மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் டேனியல், மகேந்திரன் ஆகிய இரண்டு சிறுவர்களையும் சடலமாக மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வடுவூர் காவல் நிலைய போலீஸார், சிறுவர்களிடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.