திருமால்பூர் - சென்னை ரயில் 2 மணி நேரம் தாமதம்: பயணிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு!
திருமால்பூரிலிருந்து சென்னை செல்லக்கூடிய ரயிலானது இரண்டு மணி நேரம் தாமதமானதையடுத்து கோபமடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமால்பூரிலிருந்து சென்னை செல்லக்கூடிய ரயிலானது இரண்டு மணி நேரம் தாமதமானதையடுத்து கோபமடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக சென்னைக்கு தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் திருமால்பூர் மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்குச் செல்வோர், பணி நிமித்தமாக செல்வோர் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை திருமால்பூரிலிருந்து வழக்கமாக காலை 7 மணி அளவில் புறப்படும் ரயிலானது புறப்பட்டு கூரம் அருகே வந்து கொண்டிருந்தபோது பழுதின் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நின்றது.
Advertisement
இதனால் காஞ்சிபுரம் புதிய மற்றும் பழைய ரயில்வே நிலையங்களுக்கு 7.20 மணிக்கு வரக்கூடிய ரயிலுக்காக மணிக்கணக்கில் காத்திருந்த ரயில் பயணிகள், கோபமடைந்து ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து புறப்படக்கூடிய ரயில் மூலம் முன்கூட்டியே 8.50 மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து 9.30 மணிக்கு ஒரு ரயிலை இயக்கிட அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில், நேரத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் நிலைய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, பணிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுவதாக பயணிகள் கூறினர்.
அப்போது ரயில்வே நிலைய மேனேஜர் பயணிகளிடம் அதிகார பாணியிலும், தரக்குறைவாகவும் பேசியதால் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு ரயில் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பயணிகள் புகார் புத்தகத்தைக் கேட்ட நிலையில் அதிகாரிகள் புகார் புத்தகத்தை தர மறுத்தனர். வாக்குவாதங்கள் தொடர்ந்த நிலையில் மாற்று விரைவு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, திருமால்பூரிலிருந்து 7.00-க்கு புறப்பட்ட ரயிலானது சுமார் 8.55 மணிக்கு காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் வந்தடைந்தது.
ரயில்வே நிலைய அதிகார்களின் அலட்சியமான பதிலாலும், தரக்குறைவான பேச்சாலும் ரயில்வே நிலை அலுவலகத்தை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதம் செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.