முகப்பு
தமிழ்நாடு

காதலியின் திருமணத்துக்கு வந்த காதலன் செய்த விபரீதம்: நூலிழையில் தப்பித்த மாப்பிள்ளை

தான் காதலித்த பெண்ணின் திருமணத்துக்கு வந்த காதலன், யாரும் எதிர்பாராத வகையில் ஐயரிடமிருந்து தாலியைப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 10 செப்டம்பர் 2022, 6:08 pm IST
பகிர்:


சென்னை: தான் காதலித்த பெண்ணின் திருமணத்துக்கு வந்த காதலன், யாரும் எதிர்பாராத வகையில் ஐயரிடமிருந்து தாலியைப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தொண்டையார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

நேதாஜி நகரில் உள்ள அந்த திருமண மண்டபத்தில் 7 மணிக்கு மணமகன் கையில், ஐயர் தாலியை எடுத்துக் கொடுக்க வந்தபோது. அங்கே திடீரென புகுந்த இளைஞர் ஒருவர், ஐயரின் கையிலிருந்த தாலியைப் பறித்து, மணமகளின் கழுத்தில் கட்ட முயன்றார்.

Advertisement

ஆனால், அங்கே சுற்றி நின்று கொண்டிருந்த உறவினர்கள், இளைஞரை தடுத்து நிறுத்தி தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த கலேபரத்தில் திருமணம் நின்றுபோனது.

விசாரணையில், திருமணத்தை நிறுத்தவே, அந்த இளைஞர் இவ்வாறு செய்தது தெரிய வந்துள்ளது. மணமகளும், இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். மணமகள் பெற்றோர் வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்ய நிச்சயித்த நிலையில், மண்டபத்துக்கு வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு மணமகள் மணமகனிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல், அந்த இளைஞர், நேராக மேடைக்கு வந்து தாலியை எடுத்துக் கொடுக்கும் போது பிடுங்கி மணமகள் கழுத்தில் கட்ட முயன்றுள்ளார். இது குறித்து அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்தனர். மணமகளிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் நட்சத்திர விடுதியில் பணியாற்றுவதும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

வழக்குப் பதிவு செய்யப்படாமல், திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, இளைஞருக்கும், மணமகளுக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் பேசி வருகிறார்கள். இந்த சம்பவத்தால், பாதிக்கப்படயிருந்த மணமகனின் வாழ்க்கை நூலிழையில் தப்பியது என்றே அவரது உறவினர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.