முகப்பு
தமிழ்நாடு

‘பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’: கே.பாலகிருஷ்ணன்

பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 18 ஆகஸ்ட், 2022 at 7:06 PM
‘பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’: கே.பாலகிருஷ்ணன்
பகிர்:

பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை, அரசியலாக்கிட பாஜகவினர் முயற்சித்தார்கள். அது சாத்தியமாகாத அதிருப்தியில், நிதியமைச்சரின் கார் மீது செருப்பு வீசி வன்முறையைத் தூண்டும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. குற்றமிழைத்தோர் அனைவருமே பாஜகவினர் என்பதும், திட்டமிட்டே வன்முறையில் ஈடுபட்டுள்ளதும் வீடியோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. ஆனாலும், பாஜக தலைமை திசைதிருப்பிக் கொண்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பாஜக தலைவர் மாட்டிக் கொண்டது, திருப்பூர் பாஜக பிரமுகரின் தற்கொலை, தருமபுரி பாரத மாதா ஆலயத்தின் கதவு உடைப்பு உள்ளிட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டு பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன், “இத்தகைய பாஜகவின் அடாவடி அரசியலை மக்களும், ஜனநாயக சக்திகளும் வலுவாக கண்டிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, இவர்களின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரசு உறுதியான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை சிபிஐ (எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.