மு.க. ஸ்டாலின் (கோப்புப் படங்கள்) 
தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளில் சாதி பாகுபாடு: நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு - முதல்வர் உத்தரவு

நான்குனேரி சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதி பாகுபாடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

நான்குனேரி சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதி பாகுபாடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் சாதிய வன்மத்தால் பிளஸ் 2 மாணவர் சின்னதுரையையும் அவரது தங்கையையும் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டியா சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சின்னதுரையம் அவரது தங்கை சந்திராசெல்வியும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரையையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சில நாட்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. சாதி, மத, பேதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் ஒரு சமுதாயத்தைப் படைத்து, அனைத்துத் தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில் இந்த அரசு செயலாற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.

இச்சூழ்நிலையில், இதுபோன்ற ஒரு சம்பவம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எதிர்கால சமுதாயம் சாதி, மதம் போன்ற பிற்போக்குச் சிந்தனைகளற்று, சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்; புதிய தமிழ்நாடு படைத்திட வேண்டும் என்றெல்லாம் எண்ணி கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், நான்குனேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்னைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை நமக்குத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவர் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அம்மாணவனின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். 

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்னை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும்,  பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT