நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சில பகுதிகளில் இன்னும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை உள்ளது.
இதையும் படிக்க | புயல் எதிரொலி: அரையாண்டுத் தேர்வு தேதிகள் மாற்றம்!
இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்றைய தினம் நிலைமை நன்கு சீரடைந்து விட்டது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது. எனவே, #NoPanicBuying - பொதுமக்கள் பதட்ட மனநிலையில் அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே, பால் தேவைப்படும் பிறருக்கும் பால் கிடைக்க வழிவகுக்கும்.
ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு உள்ளது. எனவே, ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சென்னையில் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம், தனியார் நிறுவனங்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கலந்தாலோசனையில் அமைச்சர் இன்று பங்கேற்றார்.
இதையும் படிக்க | சென்னையில் நாளையும்(டிச. 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை