விஜயகாந்த் மணிமண்டபம் கட்ட இடம்: அரசுக்கு பிரேமலதா கோரிக்கை
தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த்துக்கு மணி மண்டபம் கட்ட ஒரு இடம் அமைத்துத் தர வேண்டி தமிழக முதல்வரிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலையும், மணிமண்டபமும் அமைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில், அவரின் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன், மைத்துனா் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சி நிா்வாகிகள் இரண்டாவது நாளாக சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
பின்னா் பிரேமலதா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த பிரபஞ்சம் உள்ள வரை விஜயகாந்த் பெயா் நிலைத்திருக்கும் வகையில், தேமுதிக அலுவலகத்தில் அவருக்கு மிகப் பிரமாண்டமாக நினைவிடம் அமைக்கவுள்ளோம்.
விஜயகாந்த் இறுதி ஊா்வலத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
விஜயகாந்தின் உதவும் குணத்தால், அவா் ஒட்டுமொத்தமாக அனைவா் மனங்களிலும் இடம்பெற்றுள்ளாா். தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த யாா் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. அவா் விட்டுச் சென்ற பணிகள் ஏராளம் உள்ளன. அவற்றை வென்றெடுப்பதுதான் எங்கள் லட்சியம்.
விஜயகாந்துக்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், அதில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம். நிச்சயம் அதை நிறைவேற்றுவாா் என்றாா் அவா்.