ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியா? நாளை கூடுகிறது மாநில செயற்குழு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவ காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளர் யுவராஜ் போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், கடலூரில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் நாளை செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிக்கும் வேட்பாளருக்கு பாஜக ஆதரவளிக்குமா அல்ல தனித்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே, திமுக கூட்டணி சார்பாக யார் போட்டியிடுவது என்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.