கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் இன்று திறந்த வேனில் வாக்கு சேகரித்தார்.
கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும் பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை கோவனூர், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் ஆகிய பகுதிகளில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, கோவனூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு அண்ணாமலை மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, மணியக்காரன்பாளையம் பகுதியில் அண்ணாமலைக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது சரத்குமார் பேசுகையில், கச்சத்தீவு விவகாரத்தில் தமிழர்களுக்கு திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் துரோகம் செய்ததாகவும், அநாகரீகமாக பிரதமரை விமர்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். தேசத்தின் வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கோவையில் வேட்பாளராக நிற்கும் அண்ணாமலையை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, சரத்குமார் பாஜகவில் தனது கட்சியை இணைத்த பின்பு முதல் முறையாக நானும் அவரும் கோவையில் தான் தேர்தல் பிரசாரத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கும் கோவைக்கும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளதாகவும், அதை இங்குள்ள ஆட்சியாளர்கள் முறையாக அமல்படுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.