யாராவது பணம் கேட்டால் புகார் கொடுங்கள்: அமைச்சர் துரைமுருகன்
யாராவது லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்: கலைஞரின் கனவு இல்லத்துக்கு பேரம் பேசி காசு வாங்குபவர்கள் இதைவிட பிச்சை எடுக்கலாம். அப்படி யாராவது பணம் கேட்டால் புகார் கொடுங்கள், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலைஞரின் கனவு இல்லம் திட்ட ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு லேபிள் ஒட்டியதாக எடப்பாடி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் தென்பெண்ணை பாலாறு இணைப்பு என்பது எனது லட்சியம், அதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினார். உடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி முன்னிலை வகித்தார்.
விழாவில், அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட 3 1/2 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது. இதற்கு சிலர் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கொடு என கேட்பதாக தகவல் வருகிறது. எவனுக்கும் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டாம். அப்படி யாராவது கேட்டால் புகார் அளியுங்கள், அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு கொடுக்கும் திட்டத்தில் இல்லாதவர்களிடம் பேரம் பேசி காசு வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம். எவனுக்கும் நீங்க ஒத்த பைசாவை தரக் கூடாது என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அதிமுக கொண்டு வந்தது. அதற்கு திமுக லேபிள் ஒட்டியதாக எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
கலைஞருக்கு நாணயம் வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிசாமி விவரம் இல்லாமல் பேசுகிறார். இதே போலத்தான் அண்ணாவுக்கு வெளியிட்டார்கள், எம்ஜிஆருக்கு வெளியிட்டார்கள் அப்போதெல்லாம் எடப்பாடிக்கு கண் தெரியவில்லையா?
கலைஞரை எதிர்க்கட்சி எண்ணம் உடையவர்கள் கூட வந்து பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் மறைந்த தலைவர்களைகூட தாறுமாறாக பேசுகிறார்கள். இதற்கெல்லாம் காழ்ப்புணர்ச்சி காட்டக்கூடாது.
தென்பெண்ணை - பாலாறு இணைப்பு என்பது என்னுடைய லட்சியம். அதற்காக எப்படியாவது முயற்சி எடுப்பேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.