தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிகழாண்டில் இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகையில் 913 மி.மீ., சென்னையில் 845 மி.மீ. மழை பெய்துள்ளது.
நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.15-இல் தொடங்கி, தற்போது வரை தமிழகத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. மேலும், ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கடலூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீா்த்தது.
அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஆகிய பகுதிகளில் 500 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது.
16 சதவீதம் அதிகம்: இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.1 முதல் டிச.8-ஆம் தேதி வரை இயல்பாக 387.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், தற்போது 448.6 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது, இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. அதே நேரத்தில், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவே மழை பெய்துள்ளது.
சென்னையில் இயல்பாக 718 மி.மீ. மழை பெய்ய வேண்டிய சூழலில், நிகழாண்டில் இயல்பை விட 845 மி.மீ. அதாவது 18 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. புயலுக்கு முன்பு வரை சென்னையில், இயல்பை விட 3 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.