‘வாழும் போதே கடவுளாக இருந்தவர் விஜயகாந்த்’: விஷால் அஞ்சலி
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் உடல்நலக் குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் டிசம்பர் 28-ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபல நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நடிகரும் பொதுச் செயலாளருமான விஷால், கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் ஆர்யாவும் சென்றார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் பேசியதாவது:
“நடிகர் விஜயகாந்த் மறைந்தபோது என்னால் வரமுடியாதது துரதிருஷ்டவசமானது. விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக நடத்தி இருக்க வேண்டும். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 19-ஆம் தேதி சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெறும்.
இதையும் படிக்க | விஜயகாந்த் படத்துக்கு பியூஷ் கோயல் மரியாதை!
வாழும்போதே பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விஜயகாந்த் பெயரை வைப்பதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கண்டிப்பாக நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, விஜயகாந்த் நினைவிடத்துக்கு வெளியே 500-க்கும் மேற்பட்டோருக்கு நடிகர் விஷாலும், ஆரியாவும் அன்னதானம் வழங்கினர்.