முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நந்தீஸ்வரருக்கு 1000 கிலோ காய்கனிகளால் அலங்காரம்!

பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு சுமார் ஆயிரம் கிலோ எடையுடைய காய்கனிகள், இனிப்பு வகைகளால் செவ்வாய்க்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2024, 4:40 pm IST
தைப்பொங்கல் பெருவிழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு ஆயிரம் கிலோ எடையில் காய்கறிகள், மலர்கள், இனிப்புகளால் செய்யப்பட்ட அலங்காரம்.
பகிர்:

தஞ்சாவூர்: தைப்பொங்கல் பெருவிழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு சுமார் ஆயிரம் கிலோ எடையுடைய காய்கனிகள், இனிப்பு வகைகளால் செவ்வாய்க்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 108 கோ பூஜை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றன. பின்னர், மகா நந்திகேசுவரருக்கு செவ்வாய்க்கிழமை காலை உருளைகிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ, முள்ளங்கி நெல்லிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா, அண்ணாசி போன்ற பழ வகைகளாலும், முருக்கு, அதிரசம், ஜிலேபி போன்ற இனிப்புகளாலும், மல்லிகை, செம்பருத்தி, செண்டி போன்ற பூ வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ ஆயிரம் கிலோ. தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, மகா நந்திகேசுவரர் முன் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் 108 பசு மாடுகள் கொண்டு வரப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டுகள் வைத்து, மாலைகள், பட்டுத் துணி அணிவிக்கப்பட்டன. மேலும், பசுக்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இவ்விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் எஸ். மாதவன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.