வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் தெரிவித்தார்.
சென்னை: வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று(ஜன.25) இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கின் இரண்டாம் நாளில் “சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டியது ஏன்?” என்ற தலைப்பில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியது, “சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பொதுநல வழக்குப் பிரிவை, அரசியல் பிரச்னைகளுக்காக பயன்படுத்தப்படக்கூடாது.
வழக்குகளை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அரசுத் தரப்பு வழக்குகளை குறைக்க வேண்டும். முடிக்கப்பட்ட வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்துக்கு வரும் பட்சத்தில் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் உத்தரவுகளை அரசு அமல்படுத்த வேண்டும். அதனை அமல்படுத்த எங்களுக்கு பின்னால் காவல்துறையோ, ராணுவமோ இல்லை.
கொலீஜியத்தில் ஆலோசனை நடத்தி நீதிபதிகளை நியமிப்பதற்கு பதிலாக நேருக்கு நேர் விவாதித்து நியமனங்களை செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.