கூலிப்படைகளின் தலைநகராக சென்னை -அண்ணாமலை குற்றச்சாட்டு
கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.
சென்னை: கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங்கின் சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டுக்கு திங்கள்கிழமை அண்ணாமலை சென்றாா். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) பாஜக மூத்த தலைவா்கள் எல்.முருகன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோா் தில்லி சென்று, பட்டியலின தேசிய ஆணையத்தின் தலைவா் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை சந்தித்து தமிழகத்தில் பட்டியலின தலைவா்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிகழ்ந்த 17 கொடுமையான சம்பவங்களை சுட்டிக்காட்டி, உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவுள்ளனா். தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோரப் போகிறோம். இந்த கொலை சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.
சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக மாறியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மந்தகதியில் உள்ளது. இனியாவது காவல் துறை முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அண்ணாமலை.