குற்றப்பின்னணி கொண்டவர் என தன்னை கூறியதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியிருந்த நிலையில், அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
தமிழக பாஜகவில் 261 குற்றவாளிகள் இருப்பதாகவும், அவர்கள் மீது 1977 வழக்குகள் உள்ளதாகவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தன்னை குற்றப் பின்னணி கொண்டவர் என்று பேசிய அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, தான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி வழி வந்த திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை எனக் குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை மீது பதியப்பட்ட வழக்குகளை பட்டியலுட்டுள்ளார்.
மேலும், கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.
குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?
செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.