சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 55.12 அடியாக உள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணை நிரம்பிய நிலையில் உள்ளது.
மழை தொடர்ந்து நீடிப்பதால் கபினி அணையின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாள்களாக உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.
உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 31,102 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 40,018 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 50.03அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 55.12 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5.09 அடி உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 21.18 டிஎம்சியாக உள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக நான்காவது நாளாக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க தகுதியான அடி பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நான்காவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.