சிறுமி கொலை நெஞ்சைப் பதற வைக்கிறது: விஜய்
சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், “புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.