ஸ்ரீவில்லிபுத்தூரில் சிற்றுந்து விபத்து: 3 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி!
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி...
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் பலி
Advertisement
Advertisement
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 8:20 மணி அளவில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் சிற்றுந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி புறப்பட்டது. காலை நேரம் என்பதால் சிற்றுந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயணித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மம்சாபுரம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து கவிழ்ந்து, சாலையை விட்டு பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது. தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் சிற்றுந்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 12ம் வகுப்பு மாணவரான மம்சாபுரம் காந்தி நகர் குருசாமி மகன் நிதிஷ் குமார்(17), ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ தமிழ் 2-ம் ஆண்டு படித்து மம்சாபுரம் மீனாட்சி தோட்ட தெரு கோவந்தராஜ் மகன் சதீஷ்குமார்(20), 10ம் வகுப்பு படித்து வந்த மம்சாபுரம் மேலூரை சேர்ந்த செல்வராஜ் மகன் வாசுராஜ்(15), தனியார் பல்கலை ஊழியரான குருசாமி மகன் மாடசாமி(28) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறுகலான சாலையில் வேகமாக சென்றதால் விபத்து நடந்ததா, அல்லது சிற்றுந்தில் அதிக பயணிகளை ஏற்றி சென்றது விபத்துக்கு காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.