பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டபேரவைத் தேர்தல் தொடங்கவுள்ளதால் அதிமுகவின் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக இபிஎஸ் அறிவித்திருக்கும் நிலையில், தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள், பிரசாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனைகள் செய்யப்படவுள்ளன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவர்கள் இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்தால் அதிமுக ஏற்குமா? என்பது குறித்தும் அக்கட்சியின் இன்றைய செயற்குழுவில் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.