பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நிதி வழங்காததைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை செல்வோரைத் திரட்டி, பாஜக அரசைக் கண்டித்து, 1,170 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
மேலும், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ. 4,034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காததை எதிர்த்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ``இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, ரத்த ஓட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு.
Advertisement
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக்கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே?
வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?’’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சிறந்த நண்பர் மோடி: டிரம்ப் பெருமிதம்!