முகப்பு
தமிழ்நாடு

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

கரூர் கூட்டநெரிசல் குற்றச்சாட்டுகளுக்கு செந்தில் பாலாஜி விளக்கம்....

Updated On : 1 அக்டோபர், 2025 at 7:28 AM
செந்தில் பாலாஜி - Photo : Youtube / Karur DMK
பகிர்:

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்தில் அரசுக்கு எதிராகவும், கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த செந்தில் பாலாஜி பேசுகையில்,

“கத்தியால் கிழிக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஸ்பிரே அடித்ததாக கூறப்படுகிறது, அது ஏன் எந்த செய்திகளின் நேரலையிலும் வரவில்லை?

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் கிடையாது, கட்டுப்பாடற்ற கூட்டம். அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக நடைபெற்ற அதிமுக கூட்டம் அமைதியாகதான் நடந்தது. அதைவிட கூடுதலாக 10,000 பேர்தான் இந்த கூட்டத்தில் இருந்தனர்.

கரூரில் பிரசாரம் நடைபெறும் இடத்துக்கு 500 மீட்டர் முன்னதாகவே வாகனத்தில் சென்று விஜய் விளக்கை அணைத்துக் கொண்டார். அனைத்துக் கூட்டமும் பிரசாரப் பகுதிக்கு வரவேண்டும் என அப்படி செய்தாரா? வாகனத்தின் முன்புறமோ, வாகனத்தின் மேல் நின்றோ ரசிகர்களுக்கு கை அசைக்காமல் சென்றது ஏன்?

கரூர் பிரசாரத்தில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. நெரிசல் ஏற்பட்ட அடுத்த நாள் 2,000 ஜோடி செருப்புகள் கிடந்தது. ஒரு காலி தண்ணீர் பாட்டிலாவது கிடந்ததா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

summary

Not an unruly crowd; an uncontrolled crowd! Senthil Balaji

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.