வெளி மாவட்ட மீனவர்களை சிறைப்பிடித்த கோடியக்கரை மீனவர்கள்!
வெளி மாவட்ட மீனவர்கள் 26 பேரை 8 படகுடன் உள்ளூர் மீனவர்கள் இன்று காலையில் (அக். 5) சிறைப்பிடித்துள்ளனர்.
வேதாரண்யம்: கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் வெளி மாவட்ட மீனவர்கள் 26 பேரை 8 படகுடன் உள்ளூர் மீனவர்கள் இன்று(அக். 5) காலை சிறைப்பிடித்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில், வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் படகுகளுடன் வந்து தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வெளி மாவட்ட மீனவர்களை அனுமதிப்பதால் தங்களுக்கு தொழில் வாய்ப்பு குறைந்து வருவதாகக் கூறி வேதாரண்யம் பகுதி உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக அரசு தரப்பில் அவ்வப்போது பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளி மாவட்ட மீனவர்கள் 26 பேரை 8 படகுகளுடன் உள்ளூர் மீனவர்கள் சிறைப்பிடித்து ஆறுகாட்டுத்துறை படகுதுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு தரப்பினர் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!