விராலிமலை அருகே ஆம்னி பேருந்து - கார் மீது மோதி விபத்து: 28 பேர் காயம்!
விராலிமலை அருகே ஆம்னி பேருந்து - கார் மீது மோதி விபத்து தொடர்பாக...
விராலிமலை: விராலிமலை அருகே ஆம்னி பேருந்து எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் 28 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று(அக். 25) இரவு தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்றுள்ளது. பேருந்தை தேனி மாவட்டம், கம்பம் புதுபள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹீம் மகன் முகமது அன்சாரி (38) ஓட்டி வந்தார்.
பேருந்து, விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பூதகுடி சுங்கச்சாவடி அருகே உள்ள மேட்டுப்பட்டி அருகே நள்ளிரவு சென்ற போது எதிரே தவறான பாதையில்(ராங் ரூட்) கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
காரை திருச்சி பொன் நகர், நியூ செல்வன் நகர் மாரியம்மன் அவுன்யூவை சேர்ந்த முத்தையா மகன் பரத் குமார் (27) ஓட்டி வந்துள்ளார். அப்போது தவறான பாதையில் வந்த காரை கவனிக்காத பேருந்து ஓட்டுநர் முகமது அன்சாரி, பேருந்தை காரின் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.
இதில், கார் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் 28 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட அப்பகுதியினர் திருச்சி, விராலிமலை மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸார் கிரேன் மூலம் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினர்.
தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!