வாணியம்பாடியில் தீ விபத்து: பல லட்சம் தேக்கு மரங்கள் எரிந்து நாசம்!
வாணியம்பாடியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக...
வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் இன்று(செப். 7) அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் மரச்சாமான்கள் மற்றும் ஃபர்னிச்சர் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
Advertisement
Advertisement
தகவலின் பெயரில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் மரக்கடையில் வைக்கப்பட்டிருந்த ஃபர்னிச்சர் பொருள்கள், சோபாக்கள், தேக்கு மரங்கள், மரச்சாமான்கள் செய்யும் இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள் உள்பட சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
வாணியம்பாடியில் வேறு பகுதியில் மரச்சாமான்களுக்கான ஃபர்னிச்சர் கடை சம்பத் நடத்தி வந்தார்.
தற்போது புதிதாக, இவர் இப்பகுதியில் கடையை திறந்து 15 நாள்களே ஆன நிலைலும் மின் இணைப்பு கூட கொடுக்காத நிலையிலும் ஏற்பட்டுள்ள தீ விபத்திற்கு மர்ம நபர்கள் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீயணைப்புத் துறையினர் மற்றும் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சென்னை டூ திருச்சி..! தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க மின்சார ரயில் இயக்கத் திட்டம்!