சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
சட்டப்பேரவைச் செயலரை அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சந்தித்தது பற்றி...
பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக உள்ள ஜி.கே. மணியை மாற்ற வேண்டும் எனக் கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைச் செயலரை சந்தித்து இன்று(வியாழக்கிழமை) மனு அளித்துள்ளனர்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலரை சந்தித்துப் பேசியுள்ளனர்.
Advertisement
Advertisement
அதன்படி பாமக கொறடாவாக மயிலம் சிவக்குமார், பேரவைக் குழுத் தலைவராக வெங்கடேஸ்வரன், பேரவை துணைக் குழுத் தலைவராக சதாசிவம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கூறுகையில், "நாங்கள் அளித்த 2 கடிதங்களை முறையாக பரிசீலனை செய்து வரும் கூட்டத்தொடரிலேயே நடவடிக்கை மேற்கொள்வோம் என்ற வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு எங்களையே அழைக்க வேண்டும். பாமக எம்.எல்.ஏ.க்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது
பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை விடுவித்துள்ளோம். சின்னம், வேட்பாளர் படிவம் உள்ளிட்டவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே உண்டு" என்று கூறியுள்ளார்.
இதனிடையே ராமதாஸ் தரப்பு, சென்னையில் தலைமைச் செயலரை சந்தித்து மனு அளித்துள்ளது.
அன்புமணி தரப்பினரால் ராமதாஸுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி ஜி.கே. மணி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.