நடிகர்களை அழைத்து வந்து தமிழக அரசு விளம்பரம் தேடுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில், பாஜகவின் புதிய பிரிவு மற்றும் அணி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. கல்வியில் சிறந்த, கம்பன் பிறந்த தமிழ்நாடு இன்று பின்தங்கியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து, சுய விளம்பரத்திற்காக அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் புத்தகப் பையில் அருவாளை எடுத்துச் செல்லும் அவலச் சூழல் நிலவுகிறது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க, உயர்கல்வியில் சில இடங்களை மட்டும் நிரப்பிவிட்டு, நடிகர்களை அழைத்து வந்து அரசு விளம்பரம் தேடுகிறது.
முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததாகக் கூறுகிறார். இதுகுறித்து நான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை கேட்டு வருகிறேன்; இதுவரை பதில் இல்லை. ஆனால், நேற்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஒரு வெற்று காகிதத்தைக் காட்டி, இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார்.
அவரிடம் இருந்தது வெற்று காகிதம்; அதுபோலவே இந்த அரசும் ஒரு வெற்று காகிதம்தான். இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும். மக்கள் திமுக வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். நானும் சி.வி. சண்முகமும் சந்தித்தது ஒரு சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கும்.
டிசம்பர் வரை எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற பேச்சு அடிபடத்தான் செய்யும்; டிசம்பரில் அதற்கான முடிவு தெரியும். கூட்டணியை மட்டும் வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், ஆனால் கூட்டணியும் அவசியம். வரும் அக்டோபர் 12-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரையில் இருந்து 'மக்கள் சந்திப்பு பயணத்தை' தொடங்குகிறோம்.
இதன் முதல் நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கலந்துகொள்கிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.