முகப்பு
தமிழ்நாடு

கரூர் பலி: ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை - அண்ணாமலை

ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Updated On : 28 செப்டம்பர், 2025 at 12:39 PM
அண்ணாமலை
பகிர்:

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் தனிநபர் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆட்சியர் மீதும், காவல் துறை கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விஜய் மட்டுமே முதன்மை குற்றவாளி எனக் கூறுவது ஏற்புடையதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காமல் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூரில் ஒரு நபர் ஆணையம் குறித்தும், கூட்ட நெரிசல் நேர்ந்ததற்கு யார் காரணம் என்பது குறித்தும் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது,

''அரசியல்வாதிகள், ஆளும் கட்சி ஆயிரம் சொல்வார்கள், அதைக் கேட்கவா அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆம்புலன்ஸ் கூட போகாத இடத்தில் அனுமதி கொடுத்த ஆட்சியர், கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

பொது இடங்களில் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கும் முன்பு அந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் தவறு நடந்து வருகிறது.

கூட்ட நெரிசலில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதில், முதல் குற்றச்சாட்டு அரசு மீதுதான். விஜய் மீதான குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன். கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

விஜய் பிரசாரத்துக்கு மாலை 3 முதல் 10 மணி வரை காவல் துறை ஏன் அனுமதி கொடுத்தது? குறைந்த நேரத்திற்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

இச்சம்பவத்தில் அரசு தோற்றுள்ளது. ஒருதலைபட்சமாக அரசு நடந்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். விஜய்யை பார்க்க மக்களுக்கு உரிமை உண்டு, மக்களைப் பார்க்கவும் விஜய்க்கு உரிமை இருக்கிறது.

விஜய் இந்த சம்பவத்தில் இருந்து வெளியே வர வேண்டும். வார இறுதியில் பிரசாரம் செய்வதை விஜய் மாற்ற வேண்டும். வார இறுதியில் குடும்பம் குடும்பமாக கூட்டம் கூடும். வார இறுதியில் கூட்டத்தை வைத்தால், குழந்தைகளை கூட்டிக்கொண்டு வரத்தான் செய்வார்கள். இந்தக் கூட்டம் தேவையா? என ஆலோசிக்க வேண்டும்'' என அண்ணாமலை குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | கரூர் பலி: மின்மாற்றி மீது தொண்டர்கள் ஏறியபோது மட்டுமே மின்தடை - மின்வாரியம்

summary

No faith in one person commission BJP Annamalai

முழு கட்டுரையைப் படிக்க →