விஜய்-சங்கீதா விவகாரத்தை அரசியல்படுத்த விரும்பவில்லை: அண்ணாமலை
நடிகரும் தவெக தலைவருமான விஜய்-சங்கீதாவின் தனிப்பட்ட விஷயத்தை அரசியல்படுத்த நான் விரும்பவில்லை என அண்ணாமலை தெரிவித்தது குறித்து...
நடிகரும் தவெக தலைவருமான விஜய்-சங்கீதாவின் தனிப்பட்ட விஷயத்தை அரசியல்படுத்த நான் விரும்பவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று அது வெளியே வந்திருக்கிறது. இது குறித்து நான் எப்போதும் சொல்வதுதான். இது விஜய், அவரது மனைவி மற்றும் நீதிமன்றத்துக்கு இடையேயான பிரச்னையாக பார்க்கிறேன்.
மேலும், இது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையாக பார்க்கிறேன். அதே நேரத்தில் விஜய்யின் அரசியல் கருத்துகளுக்கு எப்போதும் பதில் அளிப்பதற்கு தயாராக இருக்கிறேன். கணவருக்கும், மனைவிக்கும் எங்கே இருந்தாலும் மகிழ்ச்சி கிடைக்கட்டும். அதனால் அரசியல் ரீதியாக நான் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை, விரும்பவில்லை என்றார்.
Advertisement
Advertisement
விஜய் அவரது மனைவி சங்கீதா மற்றும் நீதிமன்றத்துக்கும் இடையேயான பிரச்னையை நான் அரசியல்படுத்த விரும்பவில்லை.
அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்திற்குள் ஒரு மனிதன் போய்விட்டு வெளியே வருவது போன்றது. அதுவரை தோண்டப்படாத உங்களது தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் அரசியலுக்குள் நுழைந்துவிட்ட பிறகு தோண்டுவார்கள். இது எல்லா தலைவர்களுக்குமான ஒன்றுதான். அது விஜய்க்கும் இருக்கிறது.
மேலும், விஜய் அரசியலுக்கு வரும்போது இதையெல்லாம் உணர்ந்துதான் வந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். இதை அவர் கடந்துதான் போக வேண்டும். இதையெல்லாம் தாண்டிதான் அவருடைய அரசியல் பயணம் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்பதை வரும் பேரவைத் தேர்தல் முடிவு செய்யும்.
ஒரு திரைப்பட நடிகராக வீட்டில் நிம்மதியாக இருந்திருக்கலாம். நட்சத்திர மதிப்போடு இருந்திருக்கலாம். கையை தூக்கிக் காட்டினால் ஒரு லட்சம் பேர் ஆரவாரம் செய்யலாம். பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்டதுதான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியல் களத்திற்கு வந்த பிறகு அழுத்தத்துடன் தான் அவர்கள் வெளியே வர வேண்டும். இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்க்கும் ஆரம்ப காலத்தில் இருந்தது. அதனால் இது வேண்டும், வேண்டாம் என்று நான் சொல்ல விரும்பவில்லை.
விஜய் இதனை கடந்து தான் போக வேண்டும். அதற்கான விலையையும் கொடுத்து தான் ஆக வேண்டும். இதற்கான நியாயம். தர்மத்தை தாண்டி தான் பயணம் செய்ய வேண்டும். அதனால் இதனை ஒரு தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்னையாக நான் பார்க்கிறேன். இதில் நான் இந்த நேரத்தில் ஒரு தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனத்தை வைத்து அதை அநாகரிகமாகவோ, அரசியலாக்கவோ நான் விரும்பவில்லை. எனது அரசியல் அப்படிப்பட்ட அரசியல் கிடையாது என்று அண்ணாமலை கூறினார்.
I don't want to politicize the Vijay-Sangeetha issue says Annamalai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.