விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமி வேண்டுகோள்!
நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக இயக்குநர் சீனு ராமசாமி பதிவு...
நடிகர் விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் என்று இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், மறைமுகமாக முதல்வர் ஜோசப் விஜய்யை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கருதி, விஜய் சேதுபதிக்கு எதிராக தவெகவினர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.
உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது. புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குநர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.
முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Do not attack Vijay Sethupathi personally - Seenu Ramasamy requests
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.