தேமுதிகவுடன் அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தற்போது தில்லியில் உள்ள பாஜக தலைமை, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மாநில அளவில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மத்திய அளவில் பாஜக பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. தேமுதிகவின் எதிர்பார்ப்பு என்ன? என்ன பிரச்னை? என்பது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அது நல்லபடியாக முடியும். பாஜக எங்கள் கூட்டணி கட்சி. பாஜக பேச்சுவார்த்தை நடத்தினாலும் வருவது எங்கள் கூட்டணிக்குத் தானே.
நாங்கள் அழைத்து சில கட்சியினர் வருவார்கள், பாஜக அழைத்து சில கட்சிகள் வரும். கூட்டணி குறித்து நாங்கள்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் முரண்படாத சில கூட்டணி கட்சித் தலைவர் மத்திய அரசில் ஏதாவது பதவி கேட்பார்கள். அதனால் அவர்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. எங்கள் கூட்டணியின் தலைமை அதிமுக, கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்" என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேமுதிக, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.