முகப்பு
தமிழ்நாடு

திடீர் ரூ. 2000 அறிவிப்பு ஏன்? இந்த ஆண்டுதான் கோடைக் காலம் வருகிறதா? விஜய் சரமாரி கேள்வி!

ரூ. 2000 திடீர் அறிவிப்பு ஏன்? இந்த ஆண்டுதான் கோடைக் காலம் வருகிறதா? விஜய் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளதைப் பற்றி...

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:19 AM
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.
பகிர்:

மகளிர் உரிமைத் தொகையைத் திடீரென ரூ. 2000 அறிவித்தது ஏன்? என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று (பிப். 13) காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு திமுக கூட்டணி சார்பில் பாராட்டுகளும், எதிர்க்கட்சித் தரப்பில் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?

வழக்கமாக மாதந்தோறும் 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான்.

குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி.

அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? திமுக தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் தவெக-வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி.

திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Tamil Nadu Vetri Kalam leader Vijay has questioned why the Tamil Nadu women's rights fund was suddenly announced at Rs. 2000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.