தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!
தில்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகியிருப்பது பற்றி...
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்காக தில்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை காலை ஆஜராகியுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து இரண்டு நாள்கள் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளிடம் 3 நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜன.12) நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னையில் இருந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை தில்லி புறப்பட்ட விஜய், காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
இந்த விசாரணையின்போது, சம்பவத்தன்று கூட்டத்துக்கு தாமதமாகப் புறப்பட்டது ஏன்? உள்பட பல்வேறு கேள்விகள் விஜய்யிடம் கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சுமார் 20 நேரம் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தில்லியில் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி தில்லி போலீஸாரிடம் தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு நடைமுறைகள் அடிப்படையில் தில்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்ல உள்ள அனைத்து பகுதிகளிலும் முழுப் பாதுகாப்பை தில்லி போலீஸாா் வழங்கியுள்ளனா்.
TVK Leader Vijay appeared at the CBI office in Delhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.