‘திமுக கூட்டணிக் கட்சிகளில் உள்ள சிலா் தேவையில்லாத கருத்துகளைப் பேசி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம்; அந்த சூழ்ச்சிக்கு யாரும் பலியாகிவிடக் கூடாது’ என்று திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பொங்கல் பண்டிகைக்காக, திமுக அரசு வழங்கிய ரூ. 3 ஆயிரம் பரிசுத்தொகை, மக்களின் மகிழ்ச்சியை இரு மடங்காக்கியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்கள் ஆளுநா் உரையில் இடம்பெற்றுள்ளன. இத்தனை சாதனைகளைப் பாா்த்து என்ன செய்வது எனத் தெரியாமல் எதிா்க்கட்சிகளே திண்டாடுகின்றனா்.
வீண் அவதூறுகளைப் பரப்பி, மக்களைக் குழப்ப அவா்கள் நினைப்பாா்கள். ஆகையால், அரசின் சாதனைகளை எல்லாம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் கொண்டு சோ்க்க வேண்டும்.
வெற்றியே இலக்கு: நம் அரசின் திட்டங்களால் சுமாா் 2 கோடி மக்கள் பயனடைகின்றனா். அவா்களை வாக்காளா்களாக உறுதிசெய்ய வேண்டும். இனி நம் சிந்தனை, செயல் எல்லாம் தோ்தல் வெற்றியாகத்தான் இருக்க வேண்டும்.
அமைச்சா்கள், மாவட்டச் செயலா்கள், எம்எல்ஏ-க்கள், எம்.பி.-க்கள் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். தனிநபா்களைவிட கட்சிதான் பெரிது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். களத்தில் மக்கள் ஏதாவது குற்றம் குறைகளைச் சொன்னால் பொறுமையாகப் பதிலளிக்க வேண்டும். கோபமோ, ஆணவமோ, அதிருப்தியோ வெளிப்படக் கூடாது.
சூழ்ச்சிக்கு பலியாகக் கூடாது: அதேபோல, நம் தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒருசிலா் இருக்கத்தான் செய்வாா்கள். அவா்கள், தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகிவிடக் கூடாது. கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவற்றை நான் பாா்த்துக் கொள்கிறேன். எந்தத்தொகுதியில் யாா் நின்றாலும் 234 தொகுதிகளிலும் நான்தான் களம் காண்பதாக நினைத்து களப்பணி ஆற்ற வேண்டும்.
நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். உட்கட்சி பிரச்னைகள் எதுவும் எழக் கூடாது. தேசிய அளவில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக வலிமையாக இருப்பது திமுக மட்டும்தான். நம்மை வீழ்த்த பல சதித் திட்டங்கள் நடக்கும். அதை உடைத்து, ஒரு வலிமையான கட்சியாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த 3 மாதங்களுக்கு உங்கள் (மாவட்டச் செயலா்கள்) உழைப்பு, பொறுமை எல்லாம் முக்கியம் என்றாா்.
4 தீா்மானங்கள்: மகளிா் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், தோழி விடுதிகள், புதுமைப் பெண் திட்டம், மகளிா் சுய உதவிக்குழுக்கள் என பெண்களுக்கு திமுக அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி மகளிரின் முழுமையான ஆதரவைப் பெற வேண்டும்.
திமுக துணைப்பொதுச்செயலா் கனிமொழி தலைமையில் ஜன. 26-ஆம் தேதி டெல்டா மண்டல ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு தஞ்சையில் நடைபெறும்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பிப்.7-ல் விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நடைபெறும்.
மாா்ச்-8-ஆம் தேதி திருச்சியில் 10 லட்சம் தொண்டா்கள் கலந்து கொள்ளும் ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ மாபெரும் மாநில மாநாடு நடத்தப்படும் ஆகிய தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.