ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையுடன் தொடங்குவதை ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து மாநில ஆளுநர் வெளியேறியது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் "முதலில் தமிழ்நாடு, அடுத்து கேரளம், இப்போது கர்நாடகம். இதன் நோக்கம் தெளிவானது மற்றும் வேண்டுமென்றே செய்வது.
மாநில அரசுகள் தயாரித்தளிக்கும் உரையை ஆளுநர்கள் வாசிக்க மறுத்து, குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள்போல நடந்துகொள்வது - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.
நான் முன்பே தெரிவித்தபடி, சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே இதற்கான தீர்வாக அமையும்.
இந்தியா முழுவதும் இந்தக் கருத்தைக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாலோசித்து, வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்தப் பயனற்ற, நடைமுறைக்குப் பொருந்தாத வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர, திமுக போராடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல், மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சொந்தமாக தயாரித்த உரையை வாசிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், உரையை வாசிக்காமல் பேரவையைவிட்டு வெளிநடப்பு செய்தார்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 20) தமிழக சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையைப் படிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.