அமமுகவில் இருந்து மாணிக்கராஜா நீக்கம்! திமுகவில் இணைந்தார்!
அமமுக துணைப் பொதுச் செயலராக இருந்த மாணிக்கராஜா திமுகவில் இணைந்தது பற்றி...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜவை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், அவர் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு மாணிக்கராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக மாணிக்கராஜவை அமமுகவில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்.
இவருடன் அமமுகவின் குமரி மேற்கு மாவட்ட செயலர் ரத்தினராஜ், மத்திய மாவட்ட செயலர் டெல்லஸ், தென்காசி வடக்கு மாவட்ட செயலர் ராமச்சந்திர மூர்த்தி உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து மாணிக்கராஜா பேசியதாவது:
”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அமமுக எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்ற கொள்கையே இல்லாமல் போயுள்ளது. இதன்பிறகும் அக்கட்சியில் தொடர்வது சரியாக இருக்காது” எனத் தெரிவித்தார்.