பாமக தேர்தல் அறிக்கை! அன்புமணி நாளை வெளியீடு!
பாமக தேர்தல் அறிக்கையை வெளியிடும் அன்புமணி.
பாமகவின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி நாளை(ஏப். 1) வெளியிடவுள்ளதாக பாமக செய்தித் தொடர்பாளர் க. பாலு தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில், அம்பத்தூர், செஞ்சி, கீழ்வேளூர் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி திங்கள்கிழமை வெளியிட்டார்.
அதன்படி, தருமபுரி தொகுதியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான செளமியா அன்புமணி போட்டியிடுகிறார். பெரம்பூரில் மாநிலப் பொருளாளர் ம. திலகபாமா களமிறங்குகிறார்.
இந்த நிலையில், அன்புமணி தரப்பு பாமகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது. இது தொடர்பாக, பாமக செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் க. பாலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
”2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை தியாகராயர் நகர் 10, திலக் தெருவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (ஏப். 1) புதன் கிழமை காலை 11 மணிக்கு தலைவர் அன்புமணி வெளியிடுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவுள்ள அம்சங்கள் குறித்து அந்தக் கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.