சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!
சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்ததால் மூச்சுத்திணறலால் மக்கள் அவதியடைந்ததைப் பற்றி...
சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் திங்கள்கிழமை இரவில் திடீரென பற்றிய தீயால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்தக் குப்பை கிடங்கில் நேற்றிரவு(ஆக.25) திடீரென தீப்பற்றியது. மளமள என பரவிய தீ, நான்கு மணி நேரத்திற்கு மேலாக கொளுந்துவிட்டு எரிந்தது.
இந்தத் தீயினால் நகராட்சிக்குள்பட்ட தேரடி தெரு, பெருமாள் கோயில் தெரு, வடக்கு ரத வீதி முக்குராந்தல் வரை புகை மண்டலமாக காட்சியளித்தது.
நீண்ட நேரம் தொடர்ச்சியாக எரிந்த தீயால், இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் புகையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
மேலும், இந்தப் புகையானது காற்றில் கலந்து 2 கிலோமீட்டர் வரை வெளியேறியதில் சாத்தூர் நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுபோன்று அடிக்கடி நடந்துவருவதால், இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.