ரேகா தேவ்பங்கர் எனும் 68 வயது மூதாட்டி, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் வரை சுமார் 2,200 கிலோ மீட்டர் தூர பயணத்தை சைக்கிள் மூலம் மேற்கொண்டுள்ளார். இவரது இந்த துணிச்சல் மிக்க பயணத்துக்கு காரணம் பக்தி.
கடந்த ஜூலை 24-ஆம் தேதி சைக்கிள் பயணத்தைத் தொடங்கிவிட்ட இவர், தினமும் 40 கி.மீ வரை சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். எனவே கூடிய விரைவில் இவர் வைஷ்ணவி தேவி கோயிலை சென்றடைவார் என கூறப்படுகிறது.
ரத்தன் ஷர்டா என்பவர் ரேகா தேவ்பங்கரின் பயணம் குறித்த பதிவை அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கி விட்ட நிலையில் வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை இந்த மூதாட்டி நிரூபித்து விட்டார் என்று அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதே நேரத்தில் அவரது பாதுகாப்பு தொடர்பாகவும் ஒரு சிலர் சமூக வலை தளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர்.