ஐ.நா. பொருளாதார ஆலோசனை குழுவில் இந்தியப் பெண்மணி!
ஐ.நா. அமைப்பின் உயர்நிலை சமூக, பொருளாதார ஆலோசனை குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் மேலும் 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா. அமைப்பின் உயர்நிலை சமூக, பொருளாதார ஆலோசனை குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் மேலும் 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார சவால்கள், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் உள்ளிட்டவை குறித்தும், அவற்றை சமாளிப்பது குறித்தும் ஐ.நா. பொது சபைக்கு இக்குழுவினர் ஆலோசனை வழங்க இருக்கின்றனர்.
ஜெயதி கோஷ் 1955-இல் பிறந்தவர். இவர் உலகமயமாக்கல், சர்வதேச நிதி, வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பு முறைகள், பாலினம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்னைகள் மற்றும் பருப்பொருளியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர். தற்போது, அமெரிக்காவில் உள்ள ஆம்ஹர்ஸ்ட் நகரில் உள்ள மஸாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
தில்லியை வசிப்பிடமாக கொண்ட இவர், தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேற்கத்திய பாரம்பரிய இசையிலும் திறமை வாய்ந்தவர்.
இவர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்குவதற்கு முன்பு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும் இந்தியாவிலுள்ள பல கல்வி நிறுவனங்களிலும் பொருளாதாரம் சார்ந்த தலைப்புகளில் விரிவுரையாற்றியுள்ளார். தில்லியிலுள்ள பொருளாதார ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.