கதம்பம்!
ஆந்திரா காவல் துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய். ஷியாம் சுந்தர். அவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-இல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார
மகளுக்கு மரியாதை
ஆந்திரா காவல் துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய். ஷியாம் சுந்தர். அவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-இல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.
பணியின் அடிப்படையில் பார்த்தால் ஜெஸ்ஸி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் ஜெஸ்ஸி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸியின் வருகையைக் கண்ட ஷியாம் சுந்தர், பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார்.
இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தனது மகளுக்கு சல்யூட் அடித்தது குறித்து ஷியாம் சுந்தர், ""தனக்கு இது பெருமையான விஷயம். வீட்டில் தான் அப்பா-மகள் உறவு எல்லாம், பணியின்போது மகள் தனது உயர் அதிகாரி'' என்று அவர் பெருமிதம் அடைந்துள்ளார்.
- சுந்தரி
வாசக சாலைகளுக்குநிதியுதவி!
சேலைகள் அணிவதில் மிகவும் ஆர்வமுள்ள வித்யாபாலன், தனக்கு விருப்பமான பாரம்பரிய கைத்தறி துஷார் பட்டுப் சேலைகள் உள்பட பல சேலைகளை தற்போது இணையதளம் மூலம் ஏலத்தில் விட்டு பணம் திரட்ட முன்வந்துள்ளார். எதற்காக? சேலைகள் மீதுள்ள விருப்பம் போலவே, புத்தகங்கள் படிப்பதிலும் ஆர்வமுள்ள வித்யா பாலன், பொதுமுடக்கம் காரணமாக டெல்லியில் உள்ள சமூக வாசக சாலை திட்டத்தின் கீழ் இயங்கும் இலவச வாசகசாலைகள் நிதி பற்றாக்குறை காரணமாக இயங்குவது சிரமமாக இருப்பதை அறிந்து, ஏலத்தில் கிடைக்கும் பணத்தை வாசகசாலை திட்டத்துக்கு கொடுத்து உதவ முன் வந்துள்ளார். தான் விருப்பப்பட்டு வாங்கும் சேலைகளை அவ்வப்போது ஏலத்தில் விட்டு கிடைக்கும் பணத்தை பல நல்ல காரியங்களுக்கு கொடுத்து உதவுவதை வித்யாபாலன் வழக்கமாக கொண்டுள்ளார். இவரைப் போலவே சில பாலிவுட் பிரபலங்களும் இவருடன் கை கோர்க்க முன் வந்துள்ளார்களாம்.
- அ. குமார்
8 ஆண்டுகளுக்குப் பின் சிரித்த பெண்!
கேம்ரூன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், எட்டு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக சிரித்துள்ளார். ஆப்ரிக்க கேமரூனை சேர்ந்த 27 வயதானவர் யாயா. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் யாயாவுக்கு தாடையில் சிறிய அளவில் கட்டி ஒன்று ஏற்பட்டது. பின்னர், நாள்கள் செல்ல செல்ல அந்தக் கட்டி பெரிய அளவில் வளர்ந்ததால் சரியாக சாப்பிட முடியாமலும், பேச முடியாமலும் யாயா அவதிப்பட்டு வந்திருக்கிறார். வெளியில் செல்ல வேண்டும் என்றால் முகம் முழுவதையும் மூடிக் கொண்டுதான் செல்வார்.
இப்படி கஷ்டப்பட்ட யாயாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள போதிய பணவசதி இல்லை. இந்நிலையில் மெர்சிஷிஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், கட்டியை நீக்குவதற்கான உதவி கிடைத்தது. அந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் சிகிச்சைபெற்று வந்த யாயாவுக்கு வெற்றிகரமாக கட்டி நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், ""நான் தற்போது மிகவும் மிகழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. நான் எங்கு வேண்டும் என்றாலும் செல்கிறேன்'' என்கிறார் மகிழ்ச்சியாக."கட்டியினால் மிகவும் வேதனைப்பட்டு வந்த யாயா, இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் சிரிக்க முடிந்திருக்கிறது' என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் முதல் பெண் ஓட்டுநர்
ஜம்மு - காஷ்மீரின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பூஜா தேவி. ஜம்மு - கதுவா வழித்தடத்தில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோட்டாறு ஆ.கோலப்பன்