முகப்பு
உலகம்

நான் எடுத்த படத்தை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்திவிட்டது: பெண் புகைப்படக்காரர் வேதனை!

2014-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காசாவில் தான் எடுத்த புகைப்படத்தினை, ஐநா சபையில் பாகிஸ்தான்  தவறாகப் பயன்படுத்தியதாக பெண் புகைப்படக்காரர் வேதனை தெரிவித்துள்ளார்.

Updated On : 26 செப்டம்பர், 2017 at 5:46 PM
பகிர்:

நியூயார்க்: 2014-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் காசாவில் தான் எடுத்த புகைப்படத்தினை, ஐநா சபையில் பாகிஸ்தான்  தவறாகப் பயன்படுத்தியதாக பெண் புகைப்படக்காரர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமினைச் சேர்ந்த பெண் புகைப்படக்காரர் ஹெய்தி லெவின்.தற்பொழுது அமெரிக்காவில் இருக்கும் இவர் செய்தி நிறுவனங்களுக்காக புகைப்படங்கள் எடுக்கிறார். அதிலும் குறிப்பாக சண்டை நிகழும் இடங்களில் இவர் எடுத்துள்ள படங்கள் உலகப் புகழ் பெற்றவை.

அந்த வகையில் 2014-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரான காஸாவில், இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகளை புகைப்படங்கள் எடுத்தார்.  அதில் அங்கு குண்டு தாக்குதலுக்கு பலியான ரவ்யா அபு ஜோம் என்ற பெண்ணின் புகைப்படமும் ஒன்று.தாக்குதலில் கோரத்தினை காட்டுவதாக அந்தப் படம்  அமைந்திருந்தது.

Advertisement

இந்நிலையில் தற்பொழுது ஐநா சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் கடந்த ஞாயிறு அன்று கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் உலகுக்கு தீவிரவாதத்தினை ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்குவதாக குற்றம் சாட்டினார்

பின்னர் பேசிய ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தரத் தூதர் மலீஹா லோதி, அதற்கு பதில் அளிக்கும் வகையில் காஷ்மீரில் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தும் இந்தியாவின் ஜனநாயகம் இதுதான் என்று கூறி, காஷ்மீர் தாக்குதலில் பலியான பெண் என்று ஒரு புகைப்படத்தினை காட்டினார்.

மறுநாள் இதற்கு பதில் அளித்துப் பேசிய இந்தியா, மலீஹா காட்டிய படம் போலி என்று நிரூபித்தது. அது உண்மையில் ஹெய்தி லெவினால் எடுக்கப்பட்ட ரவ்யா அபு ஜோமின் புகைப்படமாகும்.

இந்த தகவலினைக் கேள்விப்பட்ட லெவின் கடும் வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

எனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் இத்தகைய செயல்களை கண்டு மனம் வலிக்கிறது. புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவ்யா அபு ஜோமின் கவுரவத்தினை சீர்குலைக்கும் செயலாகவும் இது அமைந்திருப்பதால் பாகிஸ்தான் கண்டிப்பாக அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வாறு லெவின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.