முகப்பு
உலகம்

இந்தியா கட்டிய அணை மீது தலிபான் தாக்குதல்: தடுத்து நிறுத்திய ஆப்கன் படைகள்

ஹேரட் மாகாணாத்தில் இந்திய அரசின் உதவியில் கட்டப்பட்ட சல்மா அணையின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
சல்மா அணை
பகிர்:

ஹேரட் மாகாணாத்தில் இந்திய அரசின் உதவியில் கட்டப்பட்ட சல்மா அணையின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேறியதிலிருந்து ஆப்கானி்ஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கிட்டத்தட்ட 85 சதவிகித நிலபரப்பை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.

இதனிடையே, இந்திய அரசின் உதவியில் கட்டப்பட்ட சல்மா அணையின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாகவும் ஆனால், ஆப்கன் படை தக்க பதிலடி அளித்து தாக்குதலை நிறுத்தியுள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. இதில், தலிபான்களின் தரப்பில் பயங்கர உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக தலிபான்கள் தப்பி ஓடிவிட்டனர் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாவத் அமான் ட்விட்டர் பக்கத்தில், "இந்திய - ஆப்கன் நட்பு அணை என்றழைக்கப்படும் சல்மா அணையின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.

ஆனால், தலிபான்களின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. நல்வாய்ப்பாக, ஆப்கன் தேசிய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதன் விளைவாக அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். அவர்களுக்கு பலத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், கடந்த மாதம் ஒரு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தலிபான்கள் ஏவிய ராக்கெட் அணைக்கு அருகே விழுந்தது. சேஷ்டே ஷெரீப் மாவட்டத்தில் அமைந்துள்ள சல்மா அணை, ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப் பெரிய அணைகளில் ஒன்றாக திகழ்கிறது. மாகாணத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் நீர் பாசன தேவையையும் மின்சார தேவையும் இந்த அணையே பூர்த்தி செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.