பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிபர் கோத்தபய கலந்துகொண்டார்.
இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயா்வு, எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டது.
மேலும், இலங்கை மக்களின் நிலை கண்டு, பிரதமர் மகிந்த ராஜபட்சவைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்த நிலையில், அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைய அதிபர் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தார். அதன்படி புதிதாக 4 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆனால், பதவியேற்று 24 மணி நேரத்திற்குள்ளாக நிதியமைச்சர் அலி சப்ரி ராஜிநாமா செய்தார்.
மேலும், 42 எம்.பி.க்கள் அரசுக்கு வழங்கும் தங்களுடைய ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும் தனித்து செயல்பட உள்ளதாகவும் கூறுவதால் அரசு பெரும்பான்மையை இழந்தது.
இந்த சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் (ஏப்ரல்-5) பிற்பகல் 3 மணியளவில் தொடங்கியது. அதில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை கூட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தின் இறுதி நாளான இன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச நாளாளுமன்றதுக்கு வந்துள்ளார்.
இலங்கையில் அதிபர் ஆட்சிக்கு அதிகாரம் அளிக்கும் நடைமுறையை கைவிட்டு பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரம் வழங்கும் 19 ஆவது சட்டதிருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்ச இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதும் எதிர்க்கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது.
ராஜிநாமா குறித்து இன்று முடிவெடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.