காஸாவில் பலியான இஸ்ரேல் அமைச்சரின் மகன்!
போரில், இஸ்ரேல் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியின் மகன் கொல்லப்பட்டுள்ளார்.
ஜெருசலேம்: இஸ்ரேல் போர் அவையின் அமைச்சரும் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியுமான காடி ஐசன்கோட்டின் மகன், காஸா போர் முனையில் உயிரிழந்துள்ளார்.
ஐசன்கோட் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கட்சியின் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஆகிய இருவரும் அக்.7 தாக்குதல் பிறகு பிரதமர் நெதன்யாகு அமைத்த போர் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றினர்.
இவரது மகன் கல் மெயிர் ஐசன்கோட் (25) காஸா போர் முனையில் இறந்துள்ளார். எவ்வாறு என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து பென்னி காண்ட்ஸ், “காடி மற்றும் அவரது குடும்பத்துக்கு இஸ்ரேல் சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். கல் எதற்காக இறந்தாரோ அந்தப் புனித காரணத்துக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கல் மெயிருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஹெர்ஸ்லியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நெதன்யாகு முன்னதாக இந்த இழப்பு தனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 2024-ல் இப்படியெல்லாம் நடக்குமா? பாபா வங்காவின் கணிப்புகள்
ராணுவ மரியாதையோடு கொண்டு செல்லப்பட்ட வீரரின் உடலுக்கு பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நாடு முழுவதும் இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.