துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் துருக்கியில் மட்டும் 17,674 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அதனைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் மற்றோரு நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் இரவில் 6 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, சிரிய எல்லையையொட்டியுள்ள ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன.
துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,000-ஐக் கடந்துள்ளது. இதில் துருக்கியில் மட்டும் 17,674 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,377ஆக உள்ளது.
துருக்கி, சிரியாவுக்கு உதவும் வகையில் ஏராளமான நாடுகள் முன்வந்துள்ளன. இந்தியா சார்பில் மீட்புப் படையினர் கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவும் மீட்புப் பணிகளில் துருக்கி, சிரியாவுக்கு உதவி வருகிறது. உலக வங்கி சார்பில் 1.18 பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.