பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்!
ஆஸ்திரேலியாவில், கருத்தடை சாதனம், நழுவி இதயத்துக்குள் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில், மிகவும் அரிதிலும் அரிதாக இளம்பெண் ஒருவரின் கையில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம், நழுவி இதயத்துக்குள் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், 22 வயதாகும் க்ளோயி வெஸ்டர்வே என்ற இளம்பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கையில் கருத்தடை சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல், அதிகப்படியான ரத்தப்போக்கு, படபடப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
Advertisement
எனவே, அவர், மருத்துவமனைக்குச் சென்று, அந்த கருத்தடை (ஹார்மோன் சுரப்பிகளை தூண்டும் கருவி) அகற்றிக்கொள்ள முடிவு செய்தார். அதற்காக மருத்துவமனைக்குச் சென்ற போது அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனம் பொருத்திய இடத்தில் காணவில்லை. தேடிப்பார்த்த மருத்துவர்கள், அப்பெண்ணின் இதயத்தை உறையவைக்கும் ஒரு செய்தியை சொன்னார்கள்.
அதாவது, கருத்தடை சாதனம், உடலில் சரியாக பொருத்தப்படாததால், அது நழுவி உடலின் வேறு இடத்துக்குச் சென்றிருக்கலாம் என்றும், இப்போது அதனை அகற்ற வேண்டும் என்றால் மிகப்பெரிய அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்கள் சொன்ன தகவல்.
மருத்துவப் பரிசோதனையில், அந்தக் கருவி, உடலின் ரத்த ஓட்டத்தில் நழுவி, வலது இதயத்தின் அறைக்குள் நுழைந்துவிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
4 செ.மீ. அளவுள்ள அந்தக் கருத்தடை சாதனம், நெகிழும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கால் ஆனது, அது கையில் சிறு அறுவை சிகிச்சை மூலம் தோலுக்கு அடியில் பொருத்தப்படும். இது ரத்தத்தில் புரோஜெஸ்டெரோனை வெளிப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மாதமும் சினை முட்டை வெளிப்படுவது நிறுத்தப்படும்.
நாள்தோறும் கருத்தடை மாத்திரை சாப்பிட முடியாதவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு இந்த கருத்தடை சாதனத்தை கையில் பொருத்திக் கொள்ளலாம். இது கருவுறுதலைத் தடுக்க பயன்படுத்தப்படும் கருவியாகும். பல்வேறு கருத்தடை வழிமுறைகளில், இந்த சாதனமானது மிகவும் பாதுகாப்பானதாகவும், ஏராளமானோர் பயன்படுத்தி வருவதும் குறைவான பக்கவிளைவுகளைக் கொண்டதுமாக அறியப்படுகிறது.
க்ளோயியை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சாதனம் சரியாக பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்னர்.
கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதும், தனக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. நாளடைவில்தான் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன. உடனடியாக அதனை அகற்றிவிடலாம் என்று நினைத்தால், இப்படி நேர்ந்துவிட்டது என்கிறார் க்ளோயி.
கருத்தடை சாதனத்தை அகற்ற நினைத்த மருத்துவர்களுக்கு, அது அங்கே இல்லாததால் கடும் அதிர்ச்சிதான் முதலில் ஏற்பட்டது. என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. இங்கிருந்து அது எங்கே சென்றிருக்கும் என்றே தெரியவில்ல். இதற்கு முன்பு இப்படி ஒரு விஷயம் நடந்ததும் இல்லை. அப்பெண்ணிடம் என்ன சொல்வது என்றே தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள்.
தற்போது மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்காக க்ளோயி காத்திருக்கிறார். முதலில் அவரது நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்து பிறகு, இதயத்தில், நெஞ்சுக்கூட்டைத் திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதிலிருந்து அவர் குணமடைய 2 அல்லது 3 மாதங்கள் கூட ஆகலாம்.
இதற்கெல்லாம் மேலாக, மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், உண்மையிலேயே அந்த கருத்தடை சாதனம் அவரது துல்லியமாக எங்கிருக்கிறது என்பதை கண்டறிய இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்பதே.
இங்கிலாந்தின் மருத்துவ வரலாற்றில், இதற்கு முன்பு, இதுபோன்ற 126 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், 18 பேருக்கு அது நுரையீரலில் இருந்தும், மற்றவர்களுக்கு இதயத்திலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.